தற்போது நடைபெற்று வரும் கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள்ளைத் தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தனித் தேசியஇனம் என்ற நிலை அங்கீகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளே தமிழர்களுக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரும் எனவும் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்சியாக சமகாலத்தில் இருந்து வருகின்றது என்பதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.ஒரு முறை பேச்சுக்களில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பின்னர் நிபந்தனைகளை கூறி அது நிறைவேற்றப்படுகிறதோ இல்லையோ மீண்டும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்வதுமாக நடந்து கொண்டிருக்கின்றது.இது இராஜதந்திர நடவடிக்கை என்றோ வேறு பெயர் கொண்டோ அழைக்க முடியாது. சிறுபிள்ளைத்தனமாக நடவடிக்கை என்றே கூறவேண்டும்.தமிழர்கள் தனித்தேசம் என்ற இறைமையை அங்கீகரிக்காமல் இழிவு படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை ஓப்புக் கொள்ளும் வகையிலேயே கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. அதாவது தமிழர்கள் இழிந்த இனம் என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பும் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலையில்தான் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு அரசாங்கத்திடம் கையேந்தும் நிலையில்தான் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறு கூட்டமைப்பு பெறுகின்ற தீர்வென்வது தமிழர்கள் எதிர்பார்ப்பதைப்போன்று கௌரவமான தீர்வாக அமையாது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அது இறுதியில் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கும் என்பதை நாம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.வெறுமனே கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டிருக்கும் விமர்சகர்களாக நாம் இருந்து விடவில்லை. நாம் சொல்லுகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் நிதர்சனமாகும்,கூட்டமைப்பு இன்று தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மேடை சிறந்த எடுத்துக் காட்டாகும்.எனவே தமிழ்தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையில் நடைபெறும் பேச்சுக்கள் ஒருபோதும் தமிழருக்கான கௌரவமான தீர்வை பெற்றுத் தராது.இந்த விடயத்தில் இனியாவது கூட்டமைப்பு சுயநலத்தை விட்டுச் செயற்படவேண்டும் என்றார்.

Powered By: TNPF

பார்வை