வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும்  உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந்த உரிமைக்குச் சுயநிர்ணய உரிமை (Right Of Self – Determination) என்று பெயரிடப்பட்டுள்ளது.தேசிய இனங்கள் இந்த உரிமையின் அடிப்படையில் தெரிவு செய்வதற்குரிய அரசியல் வடிவம் பற்றிச் சர்வதேச சட்டம் குறிப்பிடவில்லை. இந்த உரிமை முழு அளவு இறைமையுள்ள தனி நாட்டையா அல்லது பிரிந்து போகும் உரித்து உள்ளடங்கிய சமஷ்டி ஆட்சியையா வழங்குகிறது என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதே சமயத்தில் தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்று கூறும் சர்வதேச சட்டம் எந்த இனத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உரிமை வழங்கப்படுகிறது என்பதையும் கூறுவதற்குத் தவறியுள்ளது.இந்தரகக் குறைபாடுகளால் இந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் நடைமுறைச் சிக்கல்களையும் வல்லரசுகள் போடும் தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனி நாடாகும் தறுவாயில் இருக்கும் இனங்களைத் தடுப்பதில் வல்லரசுகள் காட்டும் ஈடுபாடு கோட்பாட்டின் பெறுமதியைக் குறைத்துள்ளது.ஐரோப்பியத் தேசிய இனங்களுக்குப் பாரிய சாம்ராச்சியங்களில் இருந்து விடுபட்டுத் தனிநாடாகும் சுய நிர்ணய உரித்து உண்டென்ற கோட்பாட்டை முதலாம் உலகப் போர் முடிவில் அமெரிக்க அதிபர் வூட்றோ வில்சன் (Woodrow Wilson) அறிமுகஞ் செய்தார்.நவம்பர் 1917ல் ருஷ்யாவில் கொமியூனிச பொல்செவிக் (Bolshevik) ஆட்சி தோன்றியது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகள் உள்டங்கலாக அனைத்து இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டென்று அவர்கள் பிரகடனஞ் செய்தனர்.அதற்குப் பிறகு வூட்றோ வில்சன் தனது புகழ்பூத்த பதினான்கு அம்சப் (14 Point) பிரகடனத்தை வெளிப்படுத்தி சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மேலும் விரிவு படுத்தினார்.சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சாசனம் 1918ல் வெளியிடப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்கும் குடியரசுகள் அனைத்திற்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து போகும் உரித்து உண்டென்று இந்த அரசியல் சாசனம் கூறுகிறது.இரண்டாம் உலகப் போரை நடத்திய நட்பு நாடுகள் 1941ல் அத்திலாந்திக் சாசனத்தில் (Atlantic Charter) ஒப்பமிட்டனர். ஐநா உருவாக்கத்திற்கு முன்னோடியான இந்தச் சாசனத்தில் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 1942ல் இருபத்தியாறு நாடுகள் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட பிரகடனத்தில் மீண்டும் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐநாவின் அரசியல் சாசனம் 1945ல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு சுயநிர்ணய உரிமை சர்வதேசச் சட்டம், சர்வதேச இராசதந்திரம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. இன்றுவரை இந்த நிலவரம் தொடர்கிறது.
ஐநா சாசனத்தின் அத்தியாம1; சரத்து1 பகுதி2 பின்வருமாறு குறிப்பிடுகிறது. இந்தச் சாசனத்தின் நோக்கம் ‘சம உரிமை, மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையில் நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்த்தலும் சர்வதேச அமைதியைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தலுமாகும்”
ஐநாவின் (1)சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கை (International Covenant on  Civil And Political Rights-ICCPR)
(2)சர்வதேச பொருளாதார சமூகப் பண்பாட்டு உரிமைகளுக்கான உடன்படிக்கை (International Covenant on Economic,Social and Cultural rights-ICESCR) ஆகியவற்றின் முதலாம் சரத்து (Article 1) இவ்வாறு கூறுகிறது.
‘எல்லா மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை தீர்மானிக்கவும் தங்கள் பொருளாதார, சமூகப் பண்பாட்டு மேம்பாட்டை சுதந்திரமாக மேற்கொள்ளவும் உரித்து உண்டு”
ஐநாவின் 1948ம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் சரத்து 15 ஒவ்வொருவருக்கும் தேசிய உரிமை இருக்கிறதென்றும், ஒருவருடைய தேசிய உரிமையை வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாதென்றும், அதை சுயமாக மாற்;றும் உரிமையை மறுக்க முடியாதென்றும் கூறுகிறது.
சுதந்திரப் பிரகடனம் செய்து தனி நாட்டு அந்தஸ்தைப் பெறும் உரித்துப் பற்றியோ அதைப் பெறுவதற்கான  வழிமுறைகள் பற்றியோ, தேசிய இனங்களுக்கு இந்த உரிமையைப் பெற உதவும் முறை பற்றியோ ஒரு இடத்திலாவது சொல்லப்படவில்லை.
சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மேற்கூறிய குறைபாடுகள் வலுவிழக்கச் செயகின்றன. எனினும் சுய நிர்ணய உரிமை சர்வதேச் சட்டத்தின் முக்கிய பகுதியாகவும் தேசிய இனங்களின் தனி நாட்டுக் கோரிக்கையை வலுவாக்கும் ஆதாரமாகவும் இடம் பெறுவதை மறுக்க முடியாது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்திய விடுதலைப் போர் சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்டது. அதை வெறும் ஏட்டுச் சுரைக் காயாகக் கருதாமல் தமது போருக்கு வலுவூட்டும் சாசனமாகக் கருதினர்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரைகளில் தனது இனத்திற்கு சுயநிர்ணய உரிமை முழு அளவில் உண்டென்று உறுதியாகக் கூறினார். இந்த உரிமைக் கோரிக்கைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
இலங்கை சுதந்திரம்பெற முன்பே மலையகச் சிங்கள இனத்தவர்கள் தம்மை கண்டிச் சிங்களவர்கள் என்று கூறியபடி இந்தத் தீவை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றனர். கரையோரச் சிங்களவர்களுக்கான பகுதி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பகுதி, கண்டிச் சிங்களவர் பகுதி என்பன அந்த மூன்று பிரிவுகளாகும்.
இலங்கை கொமியூனிஸ்ற் கட்சி 1944ல் தமிழர்களுக்குப் பிரிந்து போக வகை செய்யும் சுய நிர்ணய உரிமை உண்டென்று கூறியது.
இலங்கை தமிழரசுக் கட்சி 1951ம் ஆண்டின் திருகோணமலைத் தேசிய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலுயுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மே 14, 1976ம் ஆண்டு பண்ணாகம் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில்,
‘இந்த நாட்டில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தேசத்திற்கும் உரியதான சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ தேசத்தின் மீள்கட்டுமானமும் மீள்உருவாக்கமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
திம்பு நகரில் 1985ம் ஆண்டில் இந்தியா தலைமையில் நடந்த இருதரப்புப் பேச்சுக்களிலும், 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்திலும் தமிழீழத்தின் இருப்பும் சுய நிர்ணய உரித்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலைப் போருக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமும், மே 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய அங்கீகாரமும் ஆதாரமாக அமைகின்றன. இன்னும் போர் முடியவில்லை போராட்டம் தொடர்கிறது. உரிமைகள் வெல்லப்படாமல் அமைதி ஏற்படவாய்ப்பில்லை.
சுய நிர்ணயக் கோட்பாட்டின்  அடிப்படையிலான தமிழீழ தேசம் மாத்திரம் தமிழீழ மக்களின் உண்மையான இலட்சியமாகும். புலம் பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் கூக்குரல் என்று இந்தக் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாது.தமிழீழ தேசத்தை சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு நிறுவும் நோக்குடன் எழுப்பப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்ற தான்தோன்றி அமைப்பு மெல்லச் செத்துவிட்டது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகவும் தேசியத் தலைவரை இயங்கு சக்தியாகவும் கொண்டதாகும்.
ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சர்வதேசப் பெறுமானம் உண்டு. இந்தக் கோரிக்கையின் உயிர்ப்பை தீர்மானிப்பவர்களாகவும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாகவும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இடைக்காலப் பின்னடைவுகள் அதை மழுங்கடிக்கப் போதுமானவையல்ல.

Powered By: TNPF

பார்வை