தந்திரத்திற்காக உயிர்விலைகளைக் கொடுக்கத் தயாராகவே இருந்தோம், இப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் உயிர்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு பெறுகின்ற சுதந்திரம் யாருக்காக என்ற கேள்வியின் முடிவில் மௌனித்துப்போனோம். ஆனாலும் சுதந்திர எண்ணம் மட்டும் இன்றளவும் உயிரோடு இருக்கின்றது. இதைத்தான் யுத்தம் எம்தேசத்தைத் தின்று நின்றபோது கூறிக்கொண்டோம்.மீட்பர்களைத் தேடி நின்றோம். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையை காலம் எமக்கு இன்று சொல்லிக் கொடுக்கின்றது, கனத்த மனதோடு கேட்டு நிற்கின்றோம். யாரெல்லாம் நாங்கள் நொந்து, நோய்பட்டுக் கிடந்தபோதும், எம் சுதந்திர தாகத்தை தணியவிடாது காப்பதாய் நினைத்தோமோ அவர்களே, நாம் குருதியை எண்ணையாய் ஊற்றி வளர்த்த சுதந்திர தீயை எச்சில் துப்பி அணைப்பதைக் கண்டோம்.வரலாற்றுக் காலம் தொட்டுக் காலகாலமாய் காட்டிக் கொடுப்பாளர்களால், வெட்டிச் சாய்க்கப்பட்ட வீர மறவர்கள் வீழ்ந்து வறண்டுபோய்க் கிடந்த எம் தேசத்து மண் கடந்த 30 வருடம் பூத்துக் குலுங்கியது. மீண்டும் இப்போது கருகத் தொடங்கிற்று. நாங்கள் எதைப் பேசுகின்றோம், என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம். வழக்கம்போல் தமிழர்களின் அரசியல் மீட்பர்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம்.கூட்டமைப்பு தற்போது அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கின்றது. ஆனால் இன்றளவும் அங்கு பேசப்பட்டவை என்ன? அங்கு பேசப்பட்டவைகளின் அடிப்படையில் தமிழர்களின் அடுத்த கட்ட போராட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியெல்லாம் கூட்டமைப்பு இன்றளவும் மக்களுடன் பேசவேயில்லை. ஏன்! அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட பேசவில்லை.நாங்கள் நினைப்பது எதுவோ அதுவே தமிழர்களின் முடிவு என்பது, கூட்டமைப்பின் எண்ணவோட்டம். ஆனால் அது தமிழர்களின் நிலைப்பாடு அல்ல. அமெரிக்கா பயணத்தின் பின்னர் கூட்டமைப்பின் நகர்வுகளும், பேச்சுக்களும் தடுமாற்றம் நிறைந்தவையாகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறானவையாகவும் இருக்கின்றன. இதை அமெரிக்க விஜயத்தின் பின்னர் அதன் முக்கியஸ்த்தர்களுடன் பேசிய சில தென்னிலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இந்த நிலைமை இலங்கையில் மட்டுமல்லாமல் கனடா, இலண்டன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர், பொதுமக்கள் சந்திப்பின்போதும், வெளிப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வடகிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல என கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது எதற்காக? என்பது மர்மமாகவே இருக்கின்ற அதேவேளை, கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதும் மர்மமாகவே இருந்து வருகின்றது.அது ஒரு புறமிருக்க, அண்மையில் இணைய ஊடகமொன்றில் எழுதப்பட்டிருந்த கட்டுரையன்றில் குறிப்பிட்டிருந்ததைப்போன்று, கூட்டமைப்பு அமெரிக்க விஜயத்தின் பின்னர் பிற நாடுகளில் நடைபெற்றிருந்த, சந்திப்புக்களில் தமிழர்கள் கடந்த அறுபது வருடங்கள் நடத்திய போராட்டத்திற்கும், அது சார்ந்த தியாகங்களுக்கும், உயிர்க்கொடைகளுக்கும் எதிராகவே பேசியிருக்கின்றது. இதில் குறிப்பாக கூட்டமைப்பு பிரிக்கப்படவேண்டும், என்பதில் அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என சுமந்திரன் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருத்தை அவர் வெளிநாட்டில் மட்டுமல்ல தாயகத்திலும் சில முக்கியமான நபர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கின்றார். இதேபோல் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசும்போது இலங்கையில் ஒரு சிறிய பகுதியில் வாழும் சிறிய இனம் நாங்கள் தனி நாடு கேட்பது சரியா? என்றும் கேட்டிருக்கின்றார். இதே நபர்தான் போர்க்குற்றச் சாட்டுக்களை கைவிடவேண்டும் என்றும் கேட்டிருந்தார். எனவே நாம் இங்கு சுமந்திரன் என்பவர் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் பற்றிய தெளிவு தேசிய பற்றுள்ள சமகால விடயங்களில் அதிக அக்கறையுள்ள மக்களுக்கு புரிந்திருக்கின்றது, குறிப்பாக பாமர மக்களுக்கு.ஆனால் சிலர் கூட்டமைப்பின் மீது அதிருப்பதி ஏற்பட்டு அதிலிருந்து விலகி தேசியத் தலைவர் எதை முன்மொழிந்து சொன்னாரோ அந்த நிலைப்பாட்டில் இன்றளவும் நிற்க நினைக்கின்றார்கள். எனவே அவர்கள் எப்போதும் மக்களால் நேசிக்கப்படப் போகிறார்கள். அவ்வாறு நேசிக்கப்பட்டால், தமது சுயலாப அரசியல் முன்நோக்கங்கள் பிழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் பறிக்கப்பட்டு விடும் என்பதில்தான் இப்போது தமிழரசு கட்சி சார்ந்தவர்களுக்கு கவலை. இதன் வெளிப்பாடுதான் கூட்டமைப்பை அரசு பிரிக்க நினைக்கின்றது என்பது.எனவே மொத்தத்தில் தமிழர்களுடைய அரசியல் நலனில் எவருக்கும் அக்கறை கிடையாது. தங்களுடைய நிலைகளை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இருப்பை நிரந்தரமாக்கி கொள்வதே தற்போதைய போட்டி நிலைக்குக் காரணம். இது அரசாங்கத்திற்கு நிச்சயமாக சாதகமாகவே இருக்கும். இதை விடவும் கூட்டமைப்பின் மீது அதிருப்தி ஏற்பட்டு வெளியேறும் நபர்கள் மூன்றாம் அணியன்றை உருவாக்கி நடந்த, நடக்கின்ற, விடயங்களின்  உண்மைத் தன்மையை வெளிக் கொணர்ந்தால் தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் இனியரு முறை அரசியல் தொடர்பில் சிந்திக்க முடியாது.இதற்கிடையில், கூட்டமைப்பிலுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் அதிலிருந்து விலகி எற்கனவே வெளியேறியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களுடன் இணைந்து மூன்றாம் நிலை பேசும் சக்தியை உருவாக்குவது ஆரோக்கியமானது என்பது தாயகத்திலுள்ள பலரின் நிலைப்பாடு. ஆனால் இதற்குள் பழமைவாதிகளும், தேசத்தைக் காட்டிக் கொடுத்த நபர்களும், உள்வாங்கப்படுவது, சிறந்த முயற்சி தொடக்கத்திலேயே சிதைக்கப்படுவதற்குச் சமமானதாகும் என்பதையும் சுட்டிக்காட்டலாம்.ஏனெனில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், யுத்தத்தை நிறுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு உத்வேகமளித்தவர்களும், யுத்தத்தை நிறுத்துவது புலிகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பதை போன்று என வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர்களும், புலிகளையும், அல்லது புலிகள் சார்ந்த சில நிலைகளையும் து£க்கிப்பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கின்றார்கள். அவர்களை கூட்டமைப்பும் சிரித்த முகத்துடன் வரவேற்றிருக்கின்றது.இதில் முக்கியமாக ஆயுதக்குழு சார்ந்தவர்களும், இறுதி வரையில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களது பாதுகாப்பில் வாழ்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். எனவே இதன் நோக்கம் ஏற்கனவே கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்ற ஏற்கனவே தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு தாயக விடுதலைப் போராட்டத்திற்கும், அது சார்ந்த நிலைகளுக்கும் தமது உளமார்ந்த பணிகளையாற்றி இறுதிவரை தேசியத் தலைவரின் நம்பிக்கைகுரியவர்களாக இருந்தவர்களை கொச்சைப்படுத்துவதே அதன்நோக்கம்.இது எதற்காகவெனில் கூட்டமைப்பில் அடுத்து தலைமையேற்கும் நிலையில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள், எனவேதான் அவர்களை கொச்சைப் படுத்துவதன் மூலம் வெளியில் அவர்களுக்குள்ள நன் மதிப்பை குறைத்துக் கொள்வது என்பதே நோக்கம். இதற்கு உதாரணமாக வெளிநாடொன்றில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் தலைவர் என விவாதித்திருக்கின்றார். அதுவும் வெளிப்படையாகவே.எனவே இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்காக நாம் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாய் பொருள் படாது. ஆனாலும் இதை குறிப்பிடுவதற்குக் காரணம், இதே கதை மாவை சேனாதிராசாவுக்கு இப்போதுதான் தெரியுமா? ஏன் புலிகள் இருந்த காலத்தில், தேசியத்தலைவரை சந்தித்தபோது இதைத் தெரிவித்திருக்கலாமே? ஏன் தேசியத் தலைவரே மன்னித்த பின்னர் அற்பர்கள் நீங்கள் இதை எதற்காக து£க்கிப்பிடித்துக் கொண்டு அலைகிறீர்கள்? தேசியத் தலைவர் முன்மொழிந்து தேசியத்தின் பால் பற்றும் ஈர்ப்பும் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் போன்றவர்கள் மீது சேறு பூசப்பட்டபோதே தமிழர்கள் நாம் விழித்திருக்கவேண்டும். அன்று எப்படி புலிகளால் முன்மொழியப்பட்டவர்கள் என கூறி கூட்டமைப்பின் தலைமை இவர்களை வெளியேற்றியதோ, அவ்வாறே இன்று முன்னாள் ஆயுதக்குழு சார்ந்தவர்கள் என்ற பெயரில் சிலரை வெளியேற்றி விட்டு தாமே தமிழர்களின் பேசும் சக்தி என கூறிக் கொண்டு அரசாங்கத்திடம் எங்கள் தியாகங்களை விற்க தமிழரசுக் கட்சி தயாராகி விட்டிருக்கின்றது.எனவே நாம் இங்கே மிக முக்கியமாக பேச விளைந்த விடயம் இதுவே கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த அரசு நினைக்கின்றது. இதற்காக அரசு சிலரை விலைக்கு வாங்கியிருக்கின்றது, என்பதெல்லாம் தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கதைகள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கப்போவதில்லை. இதேபோல் எனவே தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்த கூட்டமைப்பு சமகாலத்தின் தேவை, எனவே புலம்பெயர் தமிழர்கள் இதற்கு வழிகோலவேண்டும், காலகாலமாக புலம்பெயர் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள், யதார்த்தத்தை உணராதவர்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அவை தோற்கடிக்கப்படவேண்டும். தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவல்ல, தேசியத்தின் பால் பற்றுள்ள, மூன்றாம் நிலைச் சக்தி காலத்தின் தேவை.
-தாயகத்தில் இருந்து இளங்கீரன்-




தமிழ் மக்கள் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுத்து செல்லாது இலங்கை அரசின் கடந்த 60 வருடகால தமிழ் இனப்படுகொலையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதோடு, அது பிழையானவர்களின் கைகளுக்கு செல்லாதிருப்பதற்காக தமிழ் புத்திஜீவிகளை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் லண்டனில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.கட்சி அரசியலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.
 மாகாண சபைகள் என்பது 13 திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்காக ஒற்றை ஆட்சி முறைமைக்கு அமைவாக வழங்கப்பட்ட ஒன்று எனவும் அது எந்தவித அதிகாரமும் அற்ற அமைப்பு எனவும் தெரிவித்த கஜேந்திரகுமார், இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும் எனவும், அப்படிப்பட்ட அதிகாரங்கள் அற்ற மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது எனவும், அது பிழையானவர்களின் கைகளுக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக கூட்டமைப்பு தமிழ் புத்திஜீவிகளை சுயேட்சை குழுவாக நிறுத்துமாயின் அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
 வெறுமென போர்க்குற்;றத்தை வலியுறுத்துவதானால் போர்குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே தண்டணைக்குள்ளாக்கும் எனவும் இதனால் கடந்த 60 வருடங்களாக இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளும் இனப்படுகொலை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கப்படுவதோடு தமிழ்மக்களின் இதுவரைகால இழப்புக்களிற்கு உரிய தீர்வு கிடைக்காமல் போகலாம் எனவும், இதனால் போர்க்குற்றத்தோடு இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.இக் கலந்துரையாடலில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டமை மற்றும் இந்தியாவில் நாச்சியப்பன் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகவும் கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் முழுவடிவம் காணொளியாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும்;

•சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம்.

இனப் பிரச்சினைத் தீர்வில் அதிகாரப்பகிர்வுக்கு சிங்கள தேசம் தயாரில்லை என்ற யதார்த்தத்தினை கடந்த வார பத்தியில் விளக்கியிருந்தேன். அதிகாரப் பகிர்வுக்குத் தயாhரில்லாத சிங்கள தேசம் அதற்கு நேர் எதிரான பாதையிலேயே பயணிக்கின்றது என்பதனால் சிங்கள பௌத்த நிலைப்பாடுகளுக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமற்றது என்பதனை ஆதாரங்களுடன் கடந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியிருந்தேன். அக் கட்டுரையின் நோக்கம் இன்றும் அதிகாரப் பகிர்வு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியம் என கற்பனைகொள்வோர்  தெளிவடைய வேண்டும் என்பற்காகவேயாகும்.தமிழ்த் தேசம் தேர்தல்கள் வாயிலாக காலங்காலமாக அளித்துவரும் சுயநிர்ணயம் தேசம் என்ற தீர்ப்புக்கு அதிகாரப் பகிர்வு என்ற விடயம் பொருத்தமானதா என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
அதிகாரப் பகிர்வு என நாம் எமது பிரச்சினைக்கான தீர்வை அணுகுவோமாயின் அதிகாரத்தின் உறைவிடம்  இலங்கை (சிங்கள பௌத்த அரசிடமே)  இருப்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும். சிங்கள பௌத்த தேசியத்திடம் (அரசிடம்) இருக்கும் இறைமையில் பங்கு கேட்பதாக கருத்துப் படும். இது எமக்கு சுயமாக இறைமை இருக்கிறது – சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை மழுங்கடிப்பதாக அமையும். ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.  அதிகாரப் பகிர்வு அணுகுமுறைக்கும் சுயநிர்ணய உரிமை  அணுகுமுறைக்கும்  இடையிலான அடிப்படை வித்தியாசம் இது தான். இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு அணுகுமுறையின் கீழ் அவர்கள்(சிங்கள பௌத்த அரசு பகிர்ந்து தருவதை) மீள எடுத்துக் கொள்ள உரிமை உடையவர்கள். ஆகவே அது எமக்கு ஒரு போதும் நிலையான தீர்வைத் தரப்போவதில்லை.தேர்தல்கள் வாயிலாக தமிழ் மக்கள் அளித்து வருகின்ற சுயநிர்ணயம் மற்றும் தமிழ்த் தேசம் போன்ற மக்கள் ஆணையானது ஓர் வரலாற்று விடயம் என்பதனால் எமது கடந்தகால வரலாற்று நிலைநினறே அதனை நுணுக்கமாக ஆராயவேண்டியுள்ளது.
நாம் சுயநிர்ணய உரிமைக்கும் தனித் தேசத்திற்கும் உரித்துடையவர்களாக இருந்தும் கூட 1977 ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்களுக்கு தலைமை வகித்த கட்சிகள்  மேற்கூறிய சுயநிர்ணயம் தனித் தேசம் போன்றவற்றுக்கு கூடிய முக்கியத்துவமளிக்கவில்லை. நடைமுறையில் தமிழ் மக்ககளின் இனப்பிரச்சினையை சிங்களத் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் யாப்புத் திருத்தங்களின் ஊடாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையையே அப்போது  தமிழ்த் தலைமைகள் கொண்டியங்கின. ஒற்றையாட்சி முறைமையில் இருந்து அதிகாரப் பகிர்வை நோக்கியதாக அரசியலமைப்பினை மாற்றியமைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியுமெனனவும் அவை நம்பின.அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவருவதாயின் அதற்கான முன்நிபந்தனையாக தேசிய அரசுப் பேரவையில் (அன்றைய பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பெயர்) மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டவேண்டியிருந்தது. ஆகவே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற விடயத்தினை நடைமுறைச் சாத்தியமாக்குவதாயின் அதற்காக தேசிய அரசுப் பேரவையில் சிங்களத் தரப்புக்களின் ஆதரவு கட்டாயமானதாக இருந்தது.   இதன் அர்த்தம்  இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் 75 சதவீதம் சிங்களவர்களாக இருக்கையில் சிங்களவர்களின் விருப்பின்றி நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதாகும். எமது இனத்தின் நலன்களுக்கு எதிரான முடிவுகளை எம்முடைய கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சிங்கள தேசத்தினால் தன்னிச்சையாக நிறைவேற்றத் தக்கதாக ஆட்சிக்கட்டமைப்பு உள்ளது.இதனை நாம் எமது இனத்திற்கு எதிராகக் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் வாயிலாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் ( சென்ற வாரம் இது விபரிக்கப்பட்டிருந்தது.). அதிகாரப் பகிர்வு என்பதை முன்வைத்து 1977 வரை அமோக வெற்றியடைந்த தமிழரசுக் கட்சி பெற்ற மக்கள் ஆணை கூட இலகுவான முறையில் அன்று உதாசீனப்படுத்தப்பட்டது. இதிலிருந்து வெளிப்படையாக தமிழ் மக்கள் தேர்தல்கள் வாயிலாக அளித்துள்ள எந்த ஆணைக்கும் சிங்களத்தரப்புக்கள் மதிப்பளிக்கவோ கருத்தில் கொள்ளவோ தேiயில்லை என்பது நிரூபணமாகின்றது. காரணம் பெரும்பான்மை ஜனநாயகத்தில் சனத்தொகை அடிப்படையில் நாம் சிங்களவர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கினறோம். இதனால்;;; சிங்கள பௌத்தத்தினை பாதுகாக்கும் இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டமைப்பிற்குள் நாம் வலுவிழந்து விடுகின்றோம்.ஆகவே கடந்த காலத்தினைப் போன்றே தற்போதும் தமிழ்  மக்களது ஆணைக்கு சிங்களத் தரப்பு மதிப்பளிப்பதில்லை. எதிர்காலத்திலும் மதிப்பளிக்கத் தக்க நிலையில் அது இல்லை. எனவே இலங்கையில் சிங்கள தேசம் உருவாக்கிக் கொண்ட அரச கட்டமைப்பிற்குள் தமிழ்த்தேசத்திற்கு எந்தவித இடமும் இல்லை என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எதிர்காலத்திலும் எந்தவொரு அங்கீகாரத்தினையும் தமிழ் மக்கள் பெறமுடியாது.சிக்குண்டு இருக்கும் வரை எமது தேசம் அழிக்கப்படும் என்பதுவே உண்மையாகும். கண்முன்னால் இதுவே நடைபெறுகின்றது.இதனை உணர்ந்ததன் வெளிப்பாடே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இலங்கை அரச கட்டமைப்பிற்குள் நின்று கொண்டு அதிகாரப் பகிர்வு என்ற வழிமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். அதன்வழி 1972 இல் காங்கேசன்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் இராஜிநாமாச் செய்தார். பின்னர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதைக்கு முற்றுப்புள்ளிவைத்து சுயநிர்ணயம் என்ற புதிய பாதையினை அவர் தொடக்கிவைத்தார். இப் புதிய பாதைக்கு முழுத் தமிழ்த் தேசமும் 1977 தேர்தலில் தமது ஆணையை வழங்கியிருந்தது.ஆகவே தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி பேசுகையில் நாம் இரண்டு சுயநிர்ணய உரிமை உடைய தேசங்கள் சந்திக்கின்ற புள்ளியையே கவனத்தில் கொள்ளவேண்டும். இருதேசக்கோட்பாடு என்ற எண்ணக்கரு இதனடிப்படையிலேயே எழுச்சியடைந்தது.தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் ஒரு அரசியல் ஒப்பந்தந்தின் ஊடாக உருவாக்குகின்ற அரசே தமிழர்களுக்கு ஏற்புடையதாக அமையும். இந்த இரு தேசங்களும் ஒரு நாட்டிற்குரிய புதிய அரசொன்றை ஏற்படுத்தும் பொருட்டு இறைமையின் தேவையான பகுதிகளை மட்டும் ஒன்று கூட்டி (விட்டுக் கொடுத்து அன்றி) உருவாக்கப்படுகின்ற புதிய ஏற்பாடாக இது அமையும். தற்போதைய அரசு உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்தில் இருந்து  (அதாவது சிங்கள பௌத்த தேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அரசு என்ற கருத்தாக்கத்திலிருந்து)  ஒரு உடைப்பை செய்து உருவாக்கப்படுகின்ற இரு தேசத்திற்கும் பொதுவான அரசு இது. இத்தகைய அரசொன்றல்லாத ஒன்றில் நாம் கூட்டாக சிங்கள தேசத்துடன் வாழ்வது சாத்தியம் இல்லை.மேலும் நாம் நம்மை சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக வெளிப்படுத்தும் போது தான் சட்ட ரீதியிலும் சர்வதேச அளவிலும் நாங்கள் ஓர் தனித்துவ இறைமை கொண்ட தரப்பாக எம்மை அடையாளப்படுத்த முடியும். இறைமையின் நடைமுறை வடிவமே சுயநிர்ணய உரிமையாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்ற வகையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தினை முழுமையாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தின் இறைமையினை பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு நாம் செல்ல முயற்சிப்பது எமது இனத்தினை நாமே அழிவு நிலைக்குக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும்.எனவே தான் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கே இணங்கமுடியாது எனச் சொல்கின்ற சிங்களத் தேசம் எப்படி சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்  கொள்ளும் என்று வாசகர்கள் கேட்கலாம். இவ்விடத்தில் எனது முதலாவது கட்டுரையான ஞாயிறு தினக்குரல் நவம்பர் 6 ஆம் திகதிய “இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலம் எவ்வாறானது” என்ற தலையங்கத்தினைக் கொண்ட கட்டுரையை வாசகர்கள் மீள வாசித்துப் பார்க்கலாம்.அந்தக் கட்டுரையில் நாம் இன்று எடுக்கின்ற நிலைப்பாட்டை சர்வதேசம் நிராகரிக்க முடியாது என்றும் சர்வதேசத்தின் தற்போதைய பூகோள அரசியலுக்கு தமிழர் அரசியல் தேவைப்படுகின்றது என்றும் விளக்கியிருந்தேன்;. அதேவேளை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில் மக்கள் சுயநிர்ணயத்திற்கான ஆணையை தேர்தல்கள் வாயிலாக வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை வலியுறுத்திச் செயற்படுவதை தற்போது தலைமைகள் கைவிட்டுவிட்டு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தலாம் என்று கூறுவது சர்வதேச ஒழுங்கிலும் சர்வதேச அனுபவங்களின் அடிப்படையிலும் முடியாத காரியமாகும்.


சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம், எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது.ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது.தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது.
முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர்.இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.

சோல்பரி அரசியலமைப்பு
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இனங்களிடையே பன்மைவாதம் (pluralism) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும் நம்பினார்கள்.இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது.இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வு, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது என்பதையேயாகும்.இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற்சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.

முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது. இ
வ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள்.
அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும் போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில் உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது.மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும்.
இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர்.இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும்.மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது.இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம் கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை அரசு நடத்தியது.இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது.இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும்.
இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது.


தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது.  சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில், இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பமானது இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டியது. இதனையே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது.இச் சம்பவங்களை ஏன் தற்போது நினைவுகொள்கின்றோமெனின் அன்று எவ்வாறு தமிழ் மக்களது போராட்டத்தை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்கள் கனிந்திருந்ததோ, அதேபோன்று இன்றைய பூகோள அரசியல் சூழலானது ஒருவகையில் தமிழர்களுக்கு வாய்ப்பான அரசியல் சூழலாக கனிந்துள்ளது என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.இந்த வகையில் நோக்கினால், சர்வதேசம் பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பூகோள அரசியல் இலாப நட்டக்கணக்கில் அன்றைய சூழ்நிலையில் அதுவே தமது நலன்களுக்கு உகந்தது என அவர்கள் கணக்கிட்டமையே ஆகும். அதுவே போராட்டம் அழிக்கப்படக் காரணமாயிற்று.புலிகள் அமைப்பானது தேர்தல் அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவும் வேறு தரப்புக்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையினாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனநாயகத்திற்கு மாறானது என சர்வதேசம் வியாக்கியானப்படுத்திய அதேவேளை மக்கள் இப் போராட்டத்தின் பின்னால் நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தினையும்  சர்வதேசம் நிராகரித்தே  தனது முடிவுகளை எடுத்திருந்தது.இதனை வேறுவிதமாக கூறுவதாயின், நாங்கள் தனித்தேசம் எனவும் எங்களுக்கு என்று தனித்துவமான இறைமை இருக்கின்றது எனவும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான விடயங்களுக்குப் பின் மக்கள் உள்ளனர் என்பதற்கான நியாயங்களை புலிகள் முன்வைத்தபோது, விடுதலைப் புலிகள் நேரடியாகத் தேர்தல்களில் பங்கெடுக்காத அமைப்பு என்பதனை சாட்டாகக் கூறி அவர்களது நியாயங்களை சர்வதேசம் நிராகரித்து விட்டது.இந்த இடத்தில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் போராட்டத்தின் கொள்கையினை சர்வதேசம் நிராகரிக்கவில்லை. எனினும் போராட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்ட  கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறியே போராட்டத்தினை நசுக்க சர்வதேசம் துணை நின்றது. அடிப்படையில் சர்வதேச நியமங்களின் படி கருத்துச் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் ஓர் அமைப்பின் கொள்கையினை தவறென வெளியுலகு ஓரங்கட்டிவிட முடியாது. எனினும் ஓரு அமைப்பின் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரம்  இல்லை என்று கூறி அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேசம் கொச்சைப்படுத்தலாம். இதுவே எங்களது போராட்டத்திற்கும் நடந்தது. இது இவ்வாறிருக்க இன்றைய நிலையில் பல கேள்விகள் எம்முன் உள்ளன. அதில்இ  மிகப் பலமாக இருந்த போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் தாங்கி நின்ற கொள்கையினை தற்போதைய ஜனநாயக அரசியலுக்குள்ளாக நாம் முன்கொண்டுசெல்ல முடியுமா என்ற நம்பின்கையீனம் பலதரப்புக்களிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே இது பற்றி கவனத்தினைச் செலுத்தவேண்டியுள்ளது.இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவுறவேண்டிய விடயங்கள் உள்ளன. அதாவது ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் அரசியலானது முழுக்க முழுக்க ஜனநாயக அரசியலாகவே இருக்கப் போகின்றது. எனவே தேர்தல் வாயிலாக கொள்கைக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பொன்றை பயங்கரவாதம் எனக்கூறி சர்வதேசம் நிராகரிக்கமுடியாது. எனவேதான் சொல்லிலும் செயலிலும் தமிழ்த்தேசியக் கொள்கையினை முன்வைக்கின்ற ஒரு தரப்பிற்கு மக்கள் முழுமையாக வாக்களித்தால் அந்தக் கொள்கை எதுவாக இருந்தாலும் எந்தவொரு தரப்பும் அதனை கொச்சைப்படுத்த முடியாது. காரணம் தேர்தல் வழியாக மக்கள் அங்கீகாரம் இருக்கின்றது குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது என்பதனாலாகும்.போர் நடைபெற்ற போது நிலவிய அரசியல் சூழல்களைக் காட்டிலும் தமிழ்த் தரப்பு நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலை இன்று உலக அரங்கில் காணப்படுகின்றது. எனவே எம் முன் உள்ள சர்வதேச அரசியல் சூழலை என்னவென நாம் விளங்கிக்கொண்டு பார்ப்போமானால் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழர் தரப்பினை பயங்கரவாதிகள் எனவும் சிங்களத் தரப்பினரை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் எனவும் சர்வதேசம் காட்டிக்கொண்டது.ஆனால், இன்றைய சூழலில் நிலைமைகள் மாற்றமடைந்து தமிழ்த் தரப்பானது பாதிக்கப்பட்ட தரப்பாகவும் சிங்களத்தரப்பானது போர்க்குற்றங்களை இழைத்து தமிழர்களின் உரிமைகளை மறுத்துச் செயற்படுகின்ற தரப்பாகவும் சர்வதேசம் ஆராயத்தொடங்கியுள்ளது.இப்படியாக சர்வதேசத்தில் ஓர் அரசியற் சூழல் மாற்றம் ஏற்பட்டது தமிழ்த் தரப்பிற்கு முதலாவது சாதகமான நிலைமையாகும். அடுத்து இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு இ பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகளை நாம் கூர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.இதேவேளை இந்த  மூன்று தரப்பு நாடுகளினதும் நகர்வுகளையும் நாம் அவதானிக்கையில் அந் நாடுகள் அவர்கள் சார்ந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவேயுள்ளன. இவ்வாறாக தமது நலன்களை சாதித்துக்கொள்வதில் மூன்று தரப்பு சர்வதேச நாடுகளிடையேயும் போட்டியுள்ள நிலையில் சில விடயங்களில் இம் மூன்று தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் போட்டித் தன்மைக்கு உரிய விடயங்களே அதிகமாகவுள்ளன. இப் போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமது நலன்களை இலக்காகக் கொண்டே இலங்கை அரசினை வழிநடத்துவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளன.அதேவேளை இம் மூன்று சர்வதேசத் தரப்புக்களும் இலங்கையை சரியாகக் கையாள்வதற்கு பல்வேறு உபாயங்களையும் கருவிகளையும் கையாள்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஒவ்வொரு நாடும் கையாளும் கருவிகளை நோக்குகையில் அதில் வர்த்தகம் மற்றும் நிதி மற்றும் நிதி சாராத உதவிகளை உதாரணப்படுத்திக் கூறமுடியும்.எனினும் இவ் இடத்தில் தமது நலன்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக்கொள்வதில் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் நாடுகள் மனித உரிமைகள்இ சட்டத்தின் ஆட்சிஇ ஊடகச் சுதந்திரம்இ ஊழல் அற்ற நிர்வாகம் என்பற்றை ஏற்படுத்துதல் என்ற நீண்ட பட்டியலுக்கு உரிய விடயங்களையே அடுக்கிவிடலாம்.  இதே போன்று இலங்கை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் நாடுகள் இனப்பிரச்சினை என்பதனையும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாம் முன்வைக்கும் முக்கியமான விடயமாக பயன்படுத்துகின்றன.மேற்கூறப்பட்ட பட்டியலில் இருக்கத்தக்க விடயங்களில் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் மேற்குலகானது இலங்கை மீது மிகுந்த அதிருப்தியுடனேயே தனது அரசியல் நகர்வினை முன்னெடுத்து வருகின்றது.கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டது போன்று, இனப்பிரச்சினைத் தீர்வை மிக முக்கிய விடயமாக இலங்கையில் தலையீட்டைக்கொண்டுள்ள நாடுகள் முன்வைக்கையில், இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சகல தரப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தரப்புக்களுக்கு இதில் ஓர் முக்கிய வகிபாகம் கிடைக்கின்றது. மேலும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பது தலையீடுகளுக்கு உரிய நாடுகளின் விடயத்தில் நின்று பார்க்கையில் எவ்வாறாகப் பெறுமானம் உடையது என்பது கூட மதிப்பிடத்தக்கது.இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஒரு சர்வதேசதரப்பு நாடுகள் எதாவது ஒருவகையில் தமது நலன்களை நோக்காகக் கொண்டேனும் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றினை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த விளைவதை சர்வதேச அரங்கில் நாம் காணமுடிகின்றது. இப்படியாக சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்கையில், அந்த சர்வதேச தரப்புக்குப் போட்டியாக இலங்கையில் தலையிட விரும்பும் சர்வதேச சமூகத்தின் மறு தரப்பொன்று, நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புக்களை  இலகுவாக்கி  நெருக்கடிக்குள் தள்ளிய விடயத்தினை தாம் நிவர்த்தி செய்துவிடலாம்.குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு தரப்பு நாடுகள் கட்டுப்பாட்டை இலங்கை மீது விதிக்க முற்பட்டால், அதிலிருந்து மற்றொரு நாடு(சர்வதேசதரப்பு) தனது இலங்கை மீதான தலையீட்டுப் போட்டிக்காக பொருளாதார உதவிகளை வழங்கி காப்பாற்றி விடமுடியும்.ஆனால் இலங்கை விவகாரங்கள் மீது அக்கறை கொண்டுள்ள சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இனப்பிரச்சினை என்ற விடயத்தினை முன்வைக்கின்ற நிலை ஏற்பட்டால் போட்டியடிப்படையில் தலையிடுகின்ற நாடுகள் இவ்விடயத்தை பதில் செயற்பாடு ஒன்றின் மூலம் நிவர்திதிக்கமுடியாத விடயமாகவே அமையும். ஒரு தரப்பினால் இனப்பிரச்சினை தீர்வு விடயம் அங்கீகரிக்கப்படுமாயின் மற்றத்தரப்பினால் அதனைத் தமது உதவிகளை வழங்கித் தகர்க்க முடியாது.
எனவே தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயம் இலங்கையில் விவகாரத்தில் அக்கறை செலுத்தும் நாடுகள், அதனை தமக்குரிய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்ற செயற்பாடானது தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை அடைந்து கொள்ளுவதற்கான மிகச் சிறந்த சந்தற்பமாக உருவாகி வருகின்றது.எனினும் தமிழ் தரப்பு தமக்கென உறுதியான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்காவிடின் இனப்பிரச்சினை என்கின்ற விடயத்தை கையில் எடுக்க விரும்பும் ஒரு சர்வதேசத்தரப்பு தமது தேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச தீர்வை வலியுறுத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க வேண்டிய நிலை இன்னுமொரு சர்வதேச தரப்புக்கு ஏற்படுமாயின் தமிழ் தரப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகும். அதனால் தான் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என நாம் வற்புறுத்துவதற்கான காரணமாகும்.தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் முக்கியத்துவமுடைய தரப்பினராக இன்று உள்ளனர். இவ்வாறான முக்கியத்துவத்திற்குரிய தமிழ் மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கிட்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கூட்;டமைப்பின் அமெரிக்க விஜயம் கூட அமைந்திருந்தது.தமிழர்களுக்கு எவ்வகையில் சர்வதேச அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாக உள்ளதோ அதற்குச் சமமான அளவு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத் தரப்புக்களுக்கும் தமிழர் தரப்பு தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது. இவ்வாறான மதிப்பீடுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் ரீதியாக மிகப் பலமான நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி எமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். எமது மக்கள் நம்பிக்கையிழந்து துவண்டுவிட வேண்டியதில்லை.


வடக்குகிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர். அதனால் அந்த இணைப்பு சட்டவிரோத மானதாக இருந்தது. இணைப்பை அவர்கள் உண்மையில் விரும்பி இருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி அதனைச் செய்திருக்க முடியும். எந்த ஒரு ஜனாதிபதியும் அப்படிச் செய்யாமல் விட்டதுதான் நீதிமன்றத்தின் முன் இந்த விவகாரம் வந்தபோது பிரச்சினைக்குரியதாக அது மாறியது.அதனால்தான் சட்டப்படி அதனைப் பிரிக்க வேண்டியி ருந்தது. இது அரசியல்வாதிகள் விட்ட தவறு. அவர்கள் இப்போது நினைத்தாலும் சட்டத்தை இயற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியும்.இவ்வாறு தெரிவிக்கிறார் முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா. அவரது பேட்டியின் இறுதிப் பகுதி இங்கு பிரசுரமாகிறது. 

கேள்வி: ஜனாதிபதிக்குத் தெரியாமல் உங்களுக் கெதிரான விடயங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்கள். அது சரியாக இருக்கலாம். கடந்த கால விடயமொன்றை ஞாபகப்படுத்த நான் விரும்புகிறேன். ஆழிப்பேரலை வந்த காலத்தில் ஹெல்பிங் அம்பாந் தோட்டை வழக்கு விசாரிக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கெதிராக அப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நீங்கள் நீதித்துறையில் உயர் பதவியில் இருந்தீர்கள். வழக்கில் இப்போதைய ஜனாதிபதிக்குச் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்படியெல்லாம் நேர்மையாக இருந்த உங்களுக்கு ஜனாதிபதி இப்படி செய்கிறார் என்று கூறுவது நியாயமானதுதானா?

பதில்: என்னை அவர்கள் இப்போது வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அந்த வழக்கில் சட்டத்தின் படியே நாம் செயற்பட்டோம். அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் அன்றே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பார். அதில் கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், தேர்தலுக்கு முன்னர் அவரைக் கைதுசெய்திருந்தால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்திருக்காது. அவர் நேரே சிறைக்குப் போயிருப்பார். ஜனாதிபதித் தேர்தலில் இருந்தும் விலகியிருப்பார்.
 
"ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை" விவகாரத்தில் பணம் எடுத்ததற்கான அத்தாட்சிகள் உள்ளன. அந்தப் பணம் விசேட கணக்கு ஒன்றிலிருந்தது. ஆனால் நிதி மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம்தான் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.குற்றவியல் தண்டனைக் கோவையின் கீழ், நல்லெண்ண அடிப்படையில் செய்யும் முறைப்பாட்டையே விசாரணைக்குட்படுத்த முடியும். கபிர் ஹாசிம் வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும் இந்த விடயத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.  அவர் கேகாலையைச் சேர்ந்தவர். ஆழிப்பேரலையைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. நிதியைப்பற்றி எதுவும் தெரியாது. இது நல்லெண்ணத்திற்கு அப்பால் அரசியல் ரீதியாகச் செய்யப்பட்டது என்பதால் தான் அதனை நிறுத்தினோம்.நிதி மோசடி இருக்குமாயின் அந்த நிதி வழக்கில் தொடர்புடையவர்கள் முறையிட்டிருக்கவேண்டும். நிதி கொடுத் தவரோ அல்லது அரசின் அதிகாரிகள் எவருமோ இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை. வெளியில் இருந்த ஒருவர் அரசியல் காரணங்களுக்காக இதனைச் செய்தார். இதனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரமுடியாது என்பதால்தான் அப்போது அந்தச் சுதந்திரத்தை மஹிந்தவுக்குப் பெற்றுக்கொடுத்தோம்.  இது மட்டுமல்ல, கொலைச் சம்பவங்கள் மூன்று தொடர்பிலும், எதையோ கொண்டு செல்லப்போய் விமான நிலையத்திலும் அவர் சிக்கியிருந்தார். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவருக்கு நீதியின் நிவாரணம் கிடைத்திருக்கிறது.மனித உரிமைகள் குறித்து முறையிட ஜெனிவாவுக்கு புகைப்படங்களை எடுத்துச்சென்றபோது மஹிந்தவை விமான நிலையத்தில் நிறுத்தினர். அவற்றைச் சோதனையிட்டபோது தனது பையை அவர் வீசியெறிந்தார். அதிலுள்ளதைப் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது சட்டம், நீதி எப்படி சிறந்த முறையில் நடைமுறையில் இருந்தது என்பது இதன்மூலமே புலனாகிறது. அவர்கள் இவர் மீது வழக்குப் பதியவில்லை.  இவர் அவர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்தார். இதில் தவறு மஹிந்தவுடையதுதான் எனச் சுட்டிக்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் அப்போது நிராகரித்திருந்தது.
 
ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டைநான் சறுக்கிய இடம்
 
கேள்வி: "ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை"  விவகாரத்தில் மோசடி இருந்ததுதான். ஆனால், சம்பந்தப்பட்ட தரப்புகள் முறைப்பாடு செய்யவில்லை என்பதுதானா நீங்கள் கூறுவது?
 
பதில்: மோசடி இல்லை என்று நான் கூறமாட்டேன். மோசடி நடந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நல்லெண்ண ரீதியில் இந்த முறைப்பாடு இல்லையென்றுதான் நான் கூறுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் இதில் இல்லை. இதனால் பொலிஸாருக்கு எப்படிச் செயற்படுவது என்ற அடிப்படையும் இருக்கவில்லை.நிதி 72 மில்லியன் ரூபா வந்திருந்தது. அவர் அதனைப் பொறுப்பேற்று லலித் வீரதுங்கவிடம் கொடுத்தார். அவர்கள் இருவரும்தான் அதில் தொடர்புபட்டிருந்தனர். இப்போதும் அவர்கள் இருவரும்தானே இருக்கின்றனர். அப்போது வேறு கணக்கில் நிதி போடப்பட்டது.  தவறு என்னவெனில், அரச கணக்கில் அந்தப் பணம் போடப்படவில்லை. வேறொரு கணக்கில் போடப்பட்டு சில நாள்கள் இருந்தது. எனக்குத் தெரிந்தவரை இந்த முறைப்பாடு கொஞ்சம் முன் கூட்டியே செய்யப்பட்டுவிட்டதாகவே கருதுகிறேன் (சிரிக்கிறார்). அது குறித்து விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை. அதற்குள்தான் இவர் ஜனாதிபதியாகி விட்டாரே.நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் என்னை விமர்சிக்கின்றனர். நான் செய்தது தவறு என்கின்றனர். ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை வழக்கு ஒன்றுதான் நான் எடுத்த முடிவுகளிலேயே தவறான ஒன்றெனக் கருதுகிறேன். நாட்டுக்கு இந்தக் கேட்டைச்  செய்தது நான்தான் என்று பலர் என்னிடம் கூறுகின்றனர். முகத்திற்கு நேராகவே தெரிவிக்கின்றனர். எனக்கு எதிரான குற்றப் பிரேரணை வந்தகையோடு நான் சந்தைக்குப் போயிருந்தேன். சாப்பிடக் கொடுத்து கையை கடித்துக்கொள்ள விட்டவர் நீங்கள்தான் என்று அங்கு மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இல்லை என்று நான் சொன்னேன். அன்றும் நான் நேர்மையாகவே செயற்பட்டேன். இன்றும் நேர்மையாகவே செயற்படுகிறேன். யார் கடித்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. நான் கடிபடமாட்டேன் (சிரிக்கிறார்). யாரும் என்னைக் கடிக்கமுடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன். அன்று சட்டத்தில் இவருக்கு இடையூறு ஏற்படக்கூடாது, ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றாரே என்ற நல்லெண்ணத் துடன்தான் நாம் செயற்பட்டோம். ரணில் விக்கிரமசிங்க சிலவேளை பதவிக்கு வந்திருந்தால் என்னை நீக்கியிருப்பார். 50 ஆயிரம் வாக்குகள் என்ற சிறிய எண்ணிக்கையில்தான் இவர் வெற்றிபெற்றார். நாம் பக்கச்சார்பாக செயற்ப டவில்லை.
 
வடக்கு, கிழக்கை இப்போதும்விரும்பினால் இணைக்க முடியும்
 
கேள்வி: தமிழ் மக்களின் மிக முக்கியமான விடயமொன்றை உங்களிடம் கேட்கவேண்டும். தமிழ் ஊடகமொன்றுக்கு நீங்கள் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கும் முதற்றடவை இதுவென்று நினைக்கின்றேன். எனவே, இந்தக் கேள்வியைக் கேட்டாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்தது சரியென்று கருதுகிறீர்களா?
 
பதில்: வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்தது ஜே. ஆர்.ஜெவர்தன. 1987ஆம் ஆண்டு என்று நினை கிறேன். இதனை ஒன்றிணைப்பது தொடர்பாகப் பொது மக்கள் வாக்கெடுப்பு வடக்கு, கிழக்கில் நடத்தப்படவேண்டும் எனச் சட்டம் இருந்தது. பயங்கரவாத செயற்பாடுகள் முடிவடைந்து பயங்கரவாதிகளின் ஆயுதங்களை ஒப்படைப்பது உறுதியான  பின்னரே இது நடத்தப்பட வேண்டுமென இருந்தது.அவசர உத்தரவொன்றின் மூலம் ஆயுதங்கள் ஒப்படைப்பு என்ற விடயத்தை அடக்கிவிட்டார் ஜே.ஆர்.ஜெவர்தன. அங்குதான் தவறு நடந்தது. நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்ததுதான் என்று அவர் கூறியிருக்கலாம். மூன்றிலிரண்டு பலம் அவருக்கு அப்போது இருந்தது. அப்படிச் செய்திருந்தால் நீதிமன்றத்திற்கும் வந்திருக்க வேண்டியதில்லை. அவர் அதைச் செய்யவில்லை.இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. பயங்கரவாதச் செயற்பாடு முடிவடைந்து அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும், ஒரு வருடகாலத்தில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பனவே அவை. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.ஜே.ஆர்.ஜெவர்தன மாகாணங்களை ஒன்றிணைத்து பின்னர் தேர்தலொன்றை நடத்தினார். அது பயனற்ற தேர்தல்.  பின்னர் வந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்கள் வாக்கெடுப்புத் தொடர்பான உத்தரவை பிற்போட்டுக்கொண்டே வந்தனர். இலகுவாக அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியி ருக்கலாம். அப்படி ஒத்திவைத்து, ஒத்திவைத்து அது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் வரை வந்தது. அப்போது தான் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.சட்டவிரோதமாக இந்த இணைப்பு இருந்தது. இதைச் சேர்க்கவேண்டுமானால் செய்யலாம். அது சட்டப்படி இடம்பெறவேண்டும் என்பதுதான் எனது வாதம். இப்போதென்றால் அது வெகு இலகுவான விடயம். ஏனெனில், இப்போது ஆயுதங்கள் இல்லை. சர்வஜனவாக்கெடுப்பொன்றை இப்போது நடத்த லாம். தேவைப்படின் செய்யலாம். அதற்கு சட்ட மொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். அப்போது அந்த நிபந்தனையின்படி நடக்கவில்லை. அந்த நிபந்தனைகள் நிறை வேற்றப்பட்டால் இப்போதும் வடக்கு, கிழக்கை இணைக்கலாம். மக்களின் அபிப்பிராயத்தை அறியாமல் இருந்ததுதான் அதில் பிரச்சினையாக இருந்தது. எனவே, அதற்கான கதவுகளை நாம் மூடிவிடவில்லை.இந்த உத்தரவை நாம் பிறப்பித்தவுடன் பிரபாகரன் யுத்தத்தை ஆரம்பித்தார்; மாவிலாறில் ஆரம்பமானது. இப்போது யுத்தமும் முடிந்துவிட்டது. உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நீதிமன்றில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சட்டமா அதிபர் ஆட்சேபித்தார். இப்போது யுத்தத்தை வென்றதாக அவர் கூறலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவரும் இதனை ஆட்சேபித்தார். சட்டத்தின் தன்மையைத்தான் அப்போது கூறினோம். 88ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை சர்வஜன வாக்கெடுப்பு வீணாக ஒத்திவைக்கப்பட்டது. வருடா வருடம் ஒத்திவைக்கபட்டமை சட்டவிரோதம்  என்றே நான் கருதினேன். இதை மீண்டும் ஒன்றிணைக்கலாம். ஆனால், சில நிபந்தனைகளுடன் என்பது நீதிமன்றத் தீர்ப்பிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
 
பிடொம்ஸை நான் நிறுத்தவில்லை
 
கேள்வி: ஆழிப்பேரலைக்குப் பின்னர் கட்டுமானப் பணிகளுக்கான கட்டமைப்பும் (P-Tomes) நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டிருக்காமல் இருந்தால் புலிகள் சிலவேளை ஜனநாயக ஓட்டத்திற்குள் வந்திருப்பார்கள் இல்லையா?
 
பதில்: அந்த ஒப்பந்தத்தில் எல்லாவற்றையும் நாம் நிறுத்திவிடவில்லை. அதுவும் நீதிமன்றம் வந்தது. ஆனால், இடைக்காலத் தடையுத்தரவு மட்டும்தான் கொடுத்தோம். இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆழிப்பேரலைக்கான நிதி நிர்வாகம் பிரபாகரன் நிர்வகிக்கும் பகுதிகளை மட்டுமே வரையறை செய்தது. இதனை சுயாதீனமாக செயற்படவைக்கவே நாம் முயன்றோம்.  
திருகோணமலை அந்த நேரத்தில் சுதந்திரமான நகராக இருந்தது. அப்போது அந்தக் கட்டமைப்பை திருமலையில் வைத்து நிர்வகித்திருக்கலாம். ஆழிப்பேரலை மீள் கட்டுமானப் பணிகளுக்கான தலைமையகம் எங்கு இருக்கவேண்டும் என்பதுதான் பிரச்சினையாக இருந்தது. அரசுக்கு கிடைக்கும் நிதி, அரசின் கட்டுப்பாடற்ற பகுதிக்குச் செல்வதாக இருந்தால் அதில் அரசின் கட்டுப்பாடு இல்லையென்றுதானே அர்த்தம். எனவே, அதில் சில நிபந்தனைகளை மட்டுமே நாம் இட்டோம். சந்திரிகா அதனைப் பின்னர் கைவிட்டார். ஒப்பந்தத்தைக் கைவிடுங்கள் என்று நாம் சொல்லவில்லை. தலைமையகம் பிரபாகரனிடம் இருந்திருந்தால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருமே அங்கு சென்றிருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு பாரபட்சமாகிவிடும். புலிகளுடன் தொடர்பில்லாதவர்களுக்கு கிடைக்காது. சர்வதேசத் திடமிருந்து கிடைக்கும் நிதி சட்டரீதியாகச் செல்லவேண்டு மென்பதையே நாம் பார்த்தோம்.  திருகோணமலையில் இதன் தலைமையகம் இருந்திருந்தால் புலிகள் பகுதியிலிருந்த மக்கள் இங்கு வந்திருக்கலாம். போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போல் ஒரு சுமூக நிலைமை ஏற்பட்டிருக்கும். இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தைத் திருத்துவார்கள் என்று தான் நான் அப்போது எண்ணினேன். ஏனெனில், உயர்நீதிமன்றம் அதில் இரண்டு நிபந்தனைகளுக்கே எதிர்ப்புத் தெரிவித்தது.
 
கேள்வி: அரசால் உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காக சர்வதேசத்திடம் செல்லப்போவதாகக் கூறுகிறீர்கள். சர்வதேச சமூகத்திடம் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
 
பதில்: இப்போது எனக்கு அநீதி இதுவரை இழைக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து செயற்பட்டார்களானால் நீதிபதிதிகள் சபை, சர்வதேச நீதிபதிகள் சம்மேளனம் ஆகியவற்றிடம் செல்வேன். இப்போதைக்கும் சட்டத்தரணிகள் சங்கம் செயற்பட்டு வருகிறது. அப்படி நிலைமை வந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம். இப்படியான சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து அரசு விலகும் என்றே நான் பார்க்கிறேன்.
 
கேள்வி: ஐ.நா.மன்றம் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் நீங்கள் சென்றால் அங்கு நியாயம் கிடைக்குமா என்றுதான் நான் கேட்கிறேன்?
 
பதில்: நீதி கிடைக்குமா என்பதை விட, இவ்வாறானவற்றை வெளிக்கொணர்ந்தால் இனிமேல் இப்படியானவை இடம்பெறாது. இது நீதிபதிமாருக்கே பெரும் அழுத்தம். நான் இதுபற்றி ஊடகவியலாளர்கள் மாநாட்டைக் கூட்டி அறிவித்ததே நீதிபதிமாருக்குப் பெரும் சக்தியாகும். இல்லையேல் மரணிக்கும் வரை எம்மை நாடாளுமன்றத்திற்கு இழுத்துச்செல்வார்களென எல்லா நீதிபதிமாரும் நினைத்துவிடுவர். நான் அமைதியாக இருக்க முடியாது. ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்; அமைதியாக இருங்கள் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி இருக்க முடியாது. நாடு இப்படி வரவர விழும்போது பிரச்சினைகள் பொங்கிவரும்போது எம்மால் சும்மா இருக்கமுடியாது.

கேள்வி: உங்களுக்கு ஞாபகமிருக்குமோ தெரியாது, தேசத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சிலரில் ஒருவரான சிங்கராயர் என்பவர் இங்கு செய்த முறையீடுகளில் நீதி கிடைக்கவில்லை. அவர் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டபோது அவர் நிரபராதி எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த ஆணையத்தின் முடிவை இங்குள்ள நீதிமன்றிடம் அவர் மீண்டும் சமர்ப்பித்தார். ஆனால், நீதிமன்றம் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கேள்வி என்னவெனில், நீங்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் நீதி கேட்டு அது கிடைத்தால் அதற்கு இங்கு உள்ளூரில்  எவ்வளவு செல்வாக்கு இருக்கப்போகிறது?

பதில்: சந்திரிகா குமாரதுங்க அம்மையார் OPTIONAL PRO-TOCOl என்ற ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கும்போது அரசமைப்பின்படி சரியான சட்டதிட்டங்களை முன்வைத்திருக்கலாம். அப்போது இந்தச் சபைகளுக்குச் சென்று அந்தச் சபைகளின் ஊடாக வரும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதை அப்போது நாம் தெளிவாகக் கூறலாம். அப்படி இருந்தால் எமக்குப் பிரச்சினை இல்லை.சிங்கராயருக்கு எதிரான தீர்ப்பை வழங்கியவன் நான் அல்லன். மார்க் பெர்னாண்டோ நீதிபதி வழங்கிய தீர்ப்பு அது. மேல்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வரை அது சென்றது. அங்கு நான் இருக்கவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இது சென்றது.இதன் பின்னர் நீதிபதி மார்க் பெர்னாண்டோவின் தீர்ப்பை மாற்றும்படி அவர்கள் என்னிடம் மனுவொன்றைச் சமர்ப்பித்தனர். எமது அரசியலமைப்பின்படி உயர்நீதிமன்றம்தான் இறுதியான நீதிமன்றக்கட்டமைப்பு. ஒரு நீதிபதி தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தால் இன்னுமொரு நீதிபதியோ, நீதிபதிகள் குழாமோ அதனை மாற்றமுடியாது. சட்டரீதியான பிரச்சினைகள் இருந்தால் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், விடயங்கள் அடிப்படையில் தீர்ப்புகளை மாற்றமுடியாது. நான் குறிப்பிட்டது என்னவெனில், சட்டமொன்றை கிரமமாகத் தயாரித்தால் இந்த நிலையை மாற்றலாம். அதனால்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.OPTIONAL  PROTOCOL ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டு அதனைச் சட்டமாக இங்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. அதனால்தான் அங்கு தவறு நடந்தது. 
 
போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்
 
கேள்வி: இந்த விடயத்துக்கு அப்பால் ஒரு கேள்வி.  இலங்கை  அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுவரும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து உங்களின் கருத்து என்ன?
 
பதில்: அரசு இந்தவிடயத்தைக் குழப்பிக்கொண்டுள்ளது.உண்மையில் யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்கு  நிவாரணம் கிடைக்கும் வகையில் செயற்பட்டிருந்தால், அதிகாரப்பகிர்வு வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படிச் செய்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் வந்திருக்காது.எல்லா யுத்தங்களிலும் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குற்றம் இல்லாத யுத்தம் இல்லையே. யுத்தமென்பதே குற்றம்தானே. யுத்தம் முடிவடைந்தவுடனும் நடுநிலையான சமநிலையான செயற்பாடுகள் தேவை. இங்கே யுத்தம் முடிந்தவுடன் பழைய கொள்கைகளையே முன்னெடுக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை வைத்திருப்பது, நிர்வாக அதிகாரத்துக்கு அழுத்தங்களை வழங்குவது உட்பட்ட விடயங்கள்  இன்னும்  உள்ளன. பலவிடயங்கள் எங்களுக்கும் தெரிகின்றன. அந்த நிலைமையை முன்னெடுப்பதால்தான் தமிழர்கள் அதிருப்தியடைகின்றனர். இப்படியான நிலையில் போர்க்குற்றச்சாட்டும் எழுந்தவுடன் அதைக் கிடப்பில் போடமுனையக்கூடாது. தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் நாமே விசாரணைகளை நடத்தி அதிகாரிகள் எவரும் தவறு செய்திருக்கும் பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கலாம்.   செய்யாவிட்டால் பிரச்சினை இல்லை. அப்படிச் செய்யாமல் இவற்றை மறைக்கமுற்பட்டால் பெரும் பிரச்சினைவரும். இதனை அரசுக்கு அடிப்பதற்கான கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அது இந்த அரசுக்குப் புரியவில்லை. இவர்கள்தான் கருவியையே கொடுத்தனர். இப்போது அடிவாங்குகின்றனர். போர்க் குற்றம் என்பது அரசுக்கு மறுபுறம் நன்மையானதுதான்.சிங்கள இனவாதத்தை இங்கு தூண்டுவதற்கு நல்ல ஏதுவாக அமைந்துவிடும் அது. சிங்கள இனவாதத்தைத் தூண்டி எப்படியாவது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.சர்வதேசம்கூட இந்த அரசைப் பலப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறது. இருப்பக்கங்களிலும் தவறான நிலைமைதான் இருக்கிறது.  குற்றங்கள் நடந்திருந்தால் உண்மையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.போர்க்குற்றத்தை எடுத்துக்கொண்டால் ஜெனிவா சாசனத்தின்படி மனித இனத்திற்கெதிரான குற்றமாகவே கருதப்படுகிறது.  யாராவது ஒருவர் போர்க்காலத்தில் கைதுசெய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டால் அதற்கான சாசனங்களில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளிவந்த பின்னர் அரசு ஏதாவது செய்யவேண்டும். இல்லையேல் சர்வதேசம் இறுக்க இறுக்க இங்கு சிங்கள இனவாதம் தலை தூக்கும். சிங்கள இனவாதத்தைக் கிளறவேண்டாம். சிங்கள இனவாதமும் தலைத்தூக்கும்போது அதற்கு எதிராக தமிழ் இனவாதம் எழும்பும். இந்தப் பிரச்சினைகளை நாம் முடிக்கவேண்டும். இல்லையேல் நாம் பழைய நிலைமைக்கே செல்வோம்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.எந்த அறிக்கையும் வரலாம்; போகலாம். எந்தப் பேச்சுகளும் நடைபெறலாம். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது.ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச ரீதியிலான தாக்கத்தை ஈடுகட்டும் வகையில் அரசின் போக்குகள் அமைந்துள்ளதால், இது விடயத்தில் தமிழர் தரப்பில் பெரும் அதிருப்தியான நிலை ஏற்பட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அதனை எந்தவிதத்திலும் ஆட்டங்காண வைக்க இடமளிக்கக்கூடாது. ஆனால், அக்கட்சி மிக்க நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடும்.நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் அக்கட்சி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது. சென்ற 60 வருடங்களாக பெரும்பான்மை இன அரசியல்கட்சிகள், "அதைத் தருகின்றோம். இதைத் தருகின்றோம் என்று கூறிவிட்டு எதையுமே முறைப்படி சட்டரீதியாகக் கொடுக்கவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் கூட அமுல்படுத்தப்படவில்லை.பண்டாரநாயக்கா செல்வநாயகம் உடன்பாடு கிழித்தெறியப்பட்டது. டட்லி சேனநாயக்கா செல்வநாயம் உடன்பாடு கைவிடப்பட்டது. சட்டவலுவுள்ள பிரதேச சபைகள் உருவாக்கித் தரப்படும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறிவிட்டுப் பின்னர் அதிலிருந்தும் அவர் நழுவிக்கொண்டார். ஆகவே, கண்ட மிச்சம் தமிழ்பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவுமே அரசியல் ரீதியாக வழங்கப்படாததுதான்.ஆயுதமேந்திய பிரபாகரன் காலத்தில் பிரபாகரன் மிஞ்சியமையால் அரசுகள் கெஞ்சின. இன்று நாங்கள் கெஞ்சி அரசு மிஞ்ச இடமளிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. எமது கோரிக்கைகள் தார்மீக அடிப்படையிலானது, சட்டரீதியானவை, சர்வதேச சமூகம் ஏற்கும் தன்மையுடையன.ஆகவே, எமது அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் பற்றுறுதியுடன் இருக்கவேண்டும். ஆனால், அதேநேரத்தில் நிதானத்துடன் செயற்படவேண்டும். "எதையாவது தாருங்கள் அதையே ஏற்றுக்கொள்வோம்" என்று நாங்கள் நினைத்தால் எம்மவர் இத்தனை பேர் சித்திரவதைப்பட்டதற்கும், உயிர்களைத் தியாகம் பண்ணியதற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.அதுமட்டுமல்ல, ரயில் பாதைகள் அமைத்துத் தந்துள்ளோம், துறைமுகம் நிர்மாணித்துத் தருவோம், புதிய பாதைகள் அமைப்போம் என்று கூறி எமக்கு ஏதோ சலுகைகள் தருவதுபோல் அரசுகள் பேசினால் அதில் அர்த்தமில்லை.இவை யாவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருகாலத்தில் நடைமுறையில் இருந்து அவற்றைச் செப்பனிடாது அரசுகள் செயல்பட்டதினால்தான் போக்குவரத்து வசதியின்மையை எமது மக்கள் இதுவரை சந்தித்து வந்துள்ளார்கள். எமக்கு வழங்கவேண்டியவற்றை வழங்காதிருந்துவிட்டு, இப்பொழுது வழங்குகின்றோம். நாங்கள் உங்கள் மீது கரிசனை கொண்டுதான் இவ்வாறு செய்கின்றோம் என்றால் அது நகைப்புக்கு இடமானது.அடிப்படைக் கொள்கைகள் என்று கூறும்போது பாரம்பரியமாகத் தமிழ் பேசிவந்த மக்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும். அதனுள் முஸ்லிம்களுக்கு ஒரு அலகை ஏற்படுத்துவது தமிழ் மக்களும், முஸ்லிம்களும் கிழக்கிலுள்ள மக்களும் சேர்ந்து தமக்குள் எடுக்கவேண்டிய ஒரு தீர்மானம். அதில் மத்திய அரசு தலையீடு செய்யவேண்டிய அவசியமில்லை.தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் சேர்ந்து தம்மைத் தாமே ஆள்வதற்கு வழிவகுப்பதுதான் மத்திய அரசின் கடமை. பெரும்பான்மையினரான தமது மொழி, மதம், கலாசாரம் என்பவற்றை சிறுபான்மையினரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பது சர்வதேச நியமங்களுக்கு முரணான ஒரு எதிர்பார்ப்பு.வடக்கு, கிழக்கை இணைப்பதால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப்பேசும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஏன் பௌத்த மக்களின் தனித்துவம் கூடப் பாதுகாக்கப்படும். இந்தியாவில் சமஷ்டி முறையைப் பின்பற்றியதால் அந்நாடு எத்தனையோ விதமான மொழியுடைய மக்கள் கூட்டங்களை வைத்துக்கொண்டும் இன்றுவரையில் பிரிந்துவிடவில்லை.இலங்கையிலும் சமஷ்டி முறை அனுசரிக்கப்பட்டால் நாடு பிரிந்துவிடாது, ஒற்றுமைக்குத்தான் அது வழிகோலும். தற்போதைய சூழலில் சமஷ்டி ஒன்றே எமக்கு விடிவைத் தரவல்லது. சமஷ்டியே எமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தவல்லது. இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் அரசுடனான பேச்சு நடைபெறவேண்டும்.இந்திய அரசமைப்பைப் போன்று சமஷ்டி என்று கூறாமலே சமஷ்டியின் கீழ் பெறக்கூடிய நல உரித்துகளை நாம் பெற இடமளிக்கலாம். சமஷ்டி என்ற பதத்தைப் பாவிக்காமலேயே மாகாணசபைகளுக்குரிய அதி உச்ச அதிகாரங்களை வழங்கலாம். வடக்கு, கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும் வலியுறுத்தலாம்.சில அரசியல் கருத்துகள் சிங்கள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் எங்கள் பாரம்பரிய உரிமைகளையும், தனித்துவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. சமஷ்டி என்ற பதத்திற்கு பிழையான அர்த்தம் கற்பித்தவர்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளே. இப்பொழுது அதனுடைய உண்மையான அர்த்தத்தை மக்கள் விளங்கிக்கொள்ள சிங்கள அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.எந்த அறிக்கையும் வரலாம், போகலாம் எந்தப் பேச்சும் நடைபெறலாம். ஆனால், எங்கள் அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.






கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறிய அளவில் கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கனடா வாழ வைப்போம் அமைப்பின் மனித நேயப்பணியானது எமது தாயக உறவுகளின் மிகுந்த ஆதரவினால் வளர்ச்சி கண்டது.நவம்பர் 27க்கு முன்னர் போரினால் பாதிக்கபட்ட 250 குடும்பங்களுக்கு உதவும் மிகப் பெரும் திட்டத்தை எமது மக்களின் ஆதரவுடன் முன்னெடுத்தோம்.லண்டனில் இருந்து உதவிய கண்ணன் எனும் உறவைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் 150 குடும்பங்களுக்கு முதற்படியாக உதவுவதற்கு ஆதரவு கிடைந்துள்ளது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கனடா வாழ வைப்போம் அமைப்பினர் உலகுக்கு பறைசாற்றியுள்ளனர்.போரினால் பாதிக்கப்பட்ட எம் தேச உறவுகளைக் வாழ வைக்க கனடா வாழ வைப்போம் மனித நேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று கனடியத் தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட எமது தாயக உறவுகள்இ எம் உறவுகளை வாழவைக்க கனடா வாழ வைப்போம் அமைப்பின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டமை மூலம்இ எம் தாயக உறவுகள் எவரும் அநாதைகள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர்.




முல்லைத்தீவு திருமுறிகண்டிப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள போதும் 64 குடும்பங்களுக்கே வீடுகள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனையகுடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணங்கள் இல்லாததினால் இவ்வீட்டுதிட்டம் அமைத்துகொடுக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மக்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தபோதும் போரின் போது அவை தவறிவிட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்குஉள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்னியில் பெய்துவரும் தொடர் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்கள் அவலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடராக பெய்துவரும் மழையினால் மீள்குடியேறிய மக்கள்வாழ்விட வசதிகள் இன்றி அவலப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.தற்போது பெய்துவரும் பருவமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடவசாதிகள் இன்றி அவலப்படுவதாகவும்.வவுனியா வடக்கு நொடுங்கேணி பிரதேசத்தில் 2500 பேர் வீடுகள் இன்றி பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளார்கள். இதேவேளை தொடரான மழையினால் விவசாயசெய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை