எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது.பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள்.ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது.3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன. சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.




















அங்கே வலியுறுத்தப்பட்ட விடையங்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு...

1. தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத் தீவிற்குள் அமைப்பதற்கான வெகுசன வாக்கெடுப்பை ஐ.நாவின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

2. தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும், சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், நிபந்தனையின்றி சொந்த இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் அவர்கள் குடியமர்த்த வேண்டும்.

3. தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினர் வெளியேற்றப்படுவதுடன், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

4. சனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய �சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தையும், மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும், மற்றும் நேரடிச் சாட்சிகளையும் போர்க்குற்ற சாட்சியங்களாகக் கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தினை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆலோசனை வழங்க வேண்டும்.

5. முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைத்து அவர்களின் கருணை மனுவை இந்திய அரச அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளும் சிறீலங்கா அரசாங்கத்துடனான நட்புறவை அனைத்துலகமும் துண்டிக்க வேண்டும்.

7. மேற்க்கூறப்பட்ட கோரிக்கைள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை புலம்பெயர் நாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.







ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட பொங்குதமிழ் உரிமைமுழக்கப் பேரணியில் பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.காலத்தின் தேவை இது கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர்... என விடுக்கப்பட்ட ஒற்றை அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெனீவா வீதிகளில் அணிதிரண்ட தமிழர் பெரும்படை கண்டு சிங்களம் சித்தம் கலங்கிப் போயுள்ளது.முள்ளிவாய்க்காலில் எல்லாமும் முடிந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் கொட்டொலி எழுப்பி கொண்டாடிய போது அழுது புரண்டெழும்பிய தமிழர்கள் அல்ல நாங்கள் என்று பலதடவை கடந்த 27மாதங்களில் நிரூபித்தாகிவிட்டது.இருந்தும் எதிர்காலமே சூன்யமாகிப் போய்விட்டதாக இன்னும் சில தமிழர் கூட்டம் முடங்கிக் கிடக்கின்ற இன்றைய நிலையில் கரிகாலன் காலத்து மறவர் படையென முரசு கொட்டி ஜெனீவா முன்றலில் திரண்ட தமிழர்படை சிங்களத்தை மட்டுமல்ல முடங்கிக் கிடந்த தமிழர் கூட்டத்தையும் சிந்திக்கவைத்துள்ளது.சிறிலங்கா மீது அனைத்துலக இராசதந்திர பொருளியல் நெருக்கடிகள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் தமிழர்கள் ஒன்று கூடி உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் செய்திருப்பது சர்வதேசத்தை இறுத்தித் தீர்வு நோக்கி நிச்சயமாக நகர்த்தும் என்பது உறுதி.


Powered By: TNPF

பார்வை