ஈழத் தமிழ் இனத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தலைமை கிடைக்கவில்லை என்பது மட்டுமே பெரும் குறைபாடு என்று யாரும் நினைத்து விடக் கூடாது. மாறாக ஈழத் தமிழ் இனத்திற்கு தியாக உணர்வு கொண்ட புத்திஜீவிகளும் கிடைக்க வில்லை என்பதே நிஜம். இதைக் கூறும்போது அர்ப்பணிப்போடு செயற்பட்ட சில புத்திஜீவிகள் மனவருத்தம் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாயினும் உண்மை நிலை, எங்களின் புத்திஜீவிகளும் சுயநலம் மிக்கவர்களாக இருந்தார்கள் - இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலக வரலாற்றை எடுத்து நோக்கும்போது இளைஞர்களை நோக்கி சோக்ரட்டீஸ் விடுத்த தர்க்க ரீதியான அழைப்பு முதல், இந்தியாவில் மிக அண்மையில் உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே வரை புத்திஜீவிகளே தத்தம் நாடுகளின் அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை வளப்படுத்தியும், ஒழுங்கு படுத்தியும் செம்மைப்படுத்தியும் உள்ளனர் என்பதை கண்டறிய முடியும். ஆனால் எங்கள் மண்ணில் மட்டும் புத்திஜீவி என்பதற்கு வேறுவிதமான வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை இல்லாமல் பயபக்தியுடன் வாழ்ந்து முடிப்பது மட்டுமே ஒரு சிறந்த புத்திஜீவிக்கு அழகு என்று கருதப்படுகின்றது.இதன் காரணமாக எங்கள் இனம் இத் துணை உயிர்த் தியாகங்களைச் செய்தும் விடிவு பெற முடியாத இனமாகத் தவிக்கின்றது. இப்போது கூட தமிழ் மக்கள் தங்களின் உரிமை விடயத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய முடியாதவர்களாக இருக்கின்றனர். எங்கள் பிரச்சினைக்கு எது தீர்வு என்பதை உணரமுடியாத தமிழ் அரசியல் தலைமைகளின் பரிதாப நிலையை நினைக்க இதயம் சுக்கு நூறாகிறது. இவ்வாறு எக்காலத்திலும் இல்லாத மிகக் குழப்பமான சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் களம் இருக்கும்போது, தமிழ் அரசியல் தலைமைகளை அழைத்து இப்படித்தான் செயற்படுங்கள் என்று சொல்வதற்கு எங்களிடம் புத்திஜீவிகள் இல்லையா? அல்லது அறிவிலார்க்கு உரைப்பவர் அவரிலும் பேதை என்ற பழமொழிக்கு அமைவாகப் பேசாமல் இருக்கிறார்களா? எதுவுமே புரியாமல் உள்ளது.எதுவாயினும் அன்பு மிகுந்த தமிழ்ப் புத்தி ஜீவிகளே! உங்களுக்குள் ஒன்றுபட்டு எங்கள் அரசியல் தலைமைகளை வழிப்படுத்துங்கள். இலங்கை அரசின் போர் வெற்றியை ஆட்சியாளர்களின் திறன் என்பதாக மட்டும் பார்க்காதீர்கள். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய தென்பகுதி புத்திஜீவிகளின் வியூகங்கள், திட்ட முன்னெடுப்புகள், இராஜதந்திரோபாயங்கள் என்பனவற்றின் வலிமையை உணருங்கள். இன்னும் உறக்கம் வேண்டாம். எங்களுக்கு தரவருகிறது சர்வதேசம்.அதை வேண்டத் தெரிந்தால் போதும். உதவுங்கள். இது எல்லாவற்றையும் போரில் பறிகொடுத்த தமிழ் இனத்தின் மன்றாட்டமான கோரிக்கை.

Powered By: TNPF

பார்வை