தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு (17-09-2011) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.அம் மகாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கட்சியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. பத்மினி சிதம்பரநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவா்களில் ஒருவருமான ஆனந்தராஐா, கட்சியின் பொருளாளா் தங்கராஐசிங்கம், காண்டீபன், கஜேந்திரகுமார் (வவுனியா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனா்.மகாநாட்டில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நேற்றய தினம் (16.09.2011) அரசாங்கத்துடன் பேச்சுக்களுக்குச் சென்றமைக்கான காரணம் சா்வதேச நெருக்கடியில் இருந்து சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே என குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளா் மகாநாட்டில் கூறப்பட்ட விடயங்கள் வருமாறு

சா்வதேச அழுத்தங்களில் இருந்து கூட்டமைப்பை காப்பாற்றவே அரசுடனான பேச்சுக்களுக்கு கூட்டமைப்பு சென்றது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச் சாட்டு ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது சிறீலங்கா அரசு மீது சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நேற்றயதினம் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச நெருக்கடியில் இருந்து சிறீலங்கா அரசைக் காப்பாற்ற துணைபோயுள்ள  கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு 20 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட மாகாண சபையை ஏற்றுக் கொள்ளுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்கு கூட்டமைப்பு சென்றமையானது சிறீலங்கா அரசு மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவேயாகும். தேர்தல் காலத்தில் தேசியம் பேசி வாக்குகளைப் பெற்று பதவியை கைப்பற்றிய கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை முற்றாகக் கைவிட்டு 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையை ஏற்று அதற்கு அதிகாரங்களைப் பெறும் பேச்சுக்களிலேயே ஈடுபட்டுவருகின்றனர்.தாம் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப்  பேசுகின்றோமா, அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகின்றோமா என்று மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அதாவது சுயநிர்ணய உரிமையை தாம் கைவிட்டுள்ளோம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றவகையில் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண அரசு இணங்கியுள்ளதாக அரசுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றில் இருந்து சிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கூட்டமைப்பு கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ள சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கின்றது.தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் 13 ஆம் திருத்தச் சட்டத்தையும், அதன் அடிப்படையிலான மாகாண சபையையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. எதிர்காலத்தில் இடம் பெறும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் செயற்படும் எந்தவொரு தரப்பும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும், அச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபையையும் நிராகரிக்க வேண்டும்.

Powered By: TNPF

பார்வை