இலங்கையில் உள்ள தமிழர்கள் தனியொரு இனமான தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும். இதனடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையவேண்டும் என்று இந்தியாவும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.புதுடில்லியில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பி. யுமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புதுடில்லியில் துயரும் தீர்வும் எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. மனித உரிமைகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பன் இந்த அமைப்பின் தலைவராக விளங்குகிறார். அவரின் தலைமையிலேயே இந்தக் கருத்தரங்கு ஆரம்பமானது. இக்கருத்தரங்கில் 8 தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்கொண்டிருந்தனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொதுவான அறிக்கை ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைகூடவில்லை.இதனையடுத்தே அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சார்பில் இந்த அறிக்கையினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ளார்.

Powered By: TNPF

பார்வை