யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன். சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் நேற்று மதியம் (16.10.2011) யாழ் நகரப் பகுதியில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் மீதான கண்மூடித்தனமான தாக்குதலானது சிறீலங்கா இராணுவத்தினரினதும் அவர்களைச் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களினதும் திட்டமிட்ட செயலே என அங்கு நிலைமையை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலையும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம் கருதுகிறது. அடக்கி ஒடுக்கப்பட்டு, தமது உரிமை களுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுக்க முடியாது, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவக் கெடுபிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இன்று மாணவ குமூகம் மட்டுமே குரல் கொடுக்கும் வல்லமையில் உள்ளார்கள்.  இவர்களின் பேச்சுரிமையையும் மறுத்து, வன்முறை மூலம் தமிழினப்படுகொலையைத் தொடர்ந்தும் சிறீலங்கா அரசு திட்டமிட்டபடி  தனது இராணுவபலம்  மூலம் செய்துவருகின்றது. ஆகவே இது போன்ற கண்மூடித்தனமான தாக்குதல்கள், காணமல் போதல், கைது, பாலியல் துன்புறுத்தல்கள், நிலப்பறிப்புப் போன்றவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ்மக்கள் தமது தாயக பூமியான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுதந்திரமாக வாழ வழி செய்வதுடன், அங்குள்ள மாணவர்கள் பாதுகாப்பாக வாழவும் நடமாடவும் அவர்களது பேச்சுச் சுதந்திரம் பாதுகாக்கப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடமும் அனைத்துலகத்திடமும் வேண்டுகோள் விடுக்கும் அதே நேரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சை பெற்று வரும் செல்வன்  சுப்பிரமணியம் தவபாலசிங்கம் உடல் நலமடைந்து அவரது கல்வியைத் தொடர உரியவர்கள் உதவவேண்டுமெனவும், இவ்வாறான வன்முறைகளையும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் துன்பங்களையும் மாணவ குமூகம், வெகுசன போராட்டங்கள் மூலம் வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி
ந. கிருபானந்தன்
தலைவர்
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்

Powered By: TNPF

பார்வை