யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம்  அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.கந்தர்மடம் பகுதியில் வைத்து கடந்த 16ம் நாள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் படுகாயமடைந்தார்.முல்லைத்தீவு மாவட்டத்தினை வதிவிடமாகக் கொண்ட இவரை தனிநாடு தேவையா என்று கேட்டுக் கேட்டு அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர்.சிறிலங்கா அரச புலனாய்வுப்பிரவினரே இதற்குப் பொறுப்பு என்று மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை மனிதஉரிமையாளரும் மாணவர் ஒன்றிய தலைவருமான சு.தவபாலசிங்கத்தை சட்டத்துக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகவே தாம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னமும் சிறிலங்கா அரசின் சட்டத்தை நடைமுறைபடுத்தும் எந்தவொரு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.அத்துடன் இதுதொடர்பாக ஐ.நாவின் சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருக்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஆசிய மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Powered By: TNPF

பார்வை