போரின் நேரடி அனர்த்தங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம், அதன் மறைமுகமான விளைவுகளையும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். எங்கள் கூட்டுக் குடும்பக் கலாசார உறவு முதல் புலம்பெயர் உறவுகளின் பிரிவுவரை எல்லாமும் ஏதோவொரு வகையில் எங்கள் வாழ்வில் சோகத்தை தருவனவாகவே அமைந்துள்ளன. வெளிநாடுகளில் வாழும் எங்களவர்களின் உறவு நிலை என்பது நீடிக்கும் என்று எண்ணுகையில், காணிப் பதிவு என்ற புதிய திட்டம் வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளின் தொடர்பை வேரறுத்துவிட்டது.ஆம், காணி உரிமையை வலுவடையச் செய்தல் என்ற வகையில் காணிப்பதிவு இடம்பெறும் அதேநேரம், இப்பதிவு மூலம் வெளிநாட்டவர்களின் காணிகளை அரசு சுவீகரிக்கவுள்ளது என்ற தகவலால் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தங்கள் பெயரிலுள்ள காணிகளை வேகமாக விற்பனை செய்கின்றனர். எனது வீடு, எனது காணி யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது. நான் என் தாய்மண்ணுக்குப் போய்வருகிறேன். எனது யாழ்ப்பாணத்து வீட்டில் உறங்கினாலே எல்லாக் கவலையும்போம் என்ற நினைப்போடு வாழ்ந்த எங்கள் உறவுகளை வேரறுத்து; ஊர் உறவு பறித்து ;தாய்த் தேசத்திற்கு வராதே என்று தடுப்பதாகக் காணிப் பதிவு அமைந்துவிட்டது.சொந்த வீட்டை, பெருமையாய்ப் பேசிய தன் காணியை விற்ற பின் தாய் மண்ணுக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வெறுப்புக்குரியதாகவே இருக்கும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய யாழ்ப்பாண மண்ணின் பெருமையை லண்டனில், கனடாவில், சுவிஸில் பிறந்த என் பிள்ளைக்கு எப்படிச் சொல்வது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதோ உன் அப்பாவின் வீடு, உன் அம்மாவின் காணி என்று,ள நாம் பிறந்த தாய் மண்- தமிழ் மண் எனச் சுட்டிக்காட்டி சுணை ஏற்றலாம் என்றால், அதற்கும் விடுவாரில்லை. ஓ! என் தமிழ்த் தேசமே! உன்னில் இருந்து என் ஆணி வேரை அறுத்து ஊர் உறவைப் பறிக்கிறார்; என் செய்வோம்!என் அப்பாவின் ஊர் யாழ்ப்பாணமாம் என்று என் பிள்ளை சொல்லுமேயன்றி, நல்லூர்க் கந்தனின் திருவிழா பார்க்கப் போகிறோம் என்றா சொல்லும்? முருகா! உன்னைத் தொலைக்காட்சியில் பார்த்து அரோகரா என்பேன்.என் பிள்ளை அதனை ஒருவிதமாகப் பார்க்கும். எல்லாம் விற்றாகிவிட்டது. என் தமிழ் உணர்வைத் தவிர. இதுவே எங்கள் புலம்பெயர் உறவுகளின் தற்போதைய மனநிலை.

Powered By: TNPF

பார்வை