தமிழனின் பழமையைப்பேசி அரசியல் நடத்துபவர்கள் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு முன்வருவதில்லை என்று யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார்.புராதன பண்பாட்டுச் சின்னங்களையும் அவை அமைந்துள்ள இடங்களையும் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ். நகரில் இடம்பெற்றது. நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில், தமிழர் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கின் புத்திஜீவிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் புராதன சின்னங்களாக 22 இடங்களைத் தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி உள்ளது. அவற்றைப் புனரமைப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும். எங்கள் வரலாற்றுப் பெருமையைக் காக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை. எங்களுடைய பிள்ளைகள் படிக்கும் வரலாற்றுப் புத்தகத்தில் எங்களுடைய வரலாறு இல்லை. எமது மக்களின் பழமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புஷ்பரத்தினம் தெரிவித்தார்.நாம் எமது பழமை மற்றும் பண்பாட்டை இழந்தால் மீள உருவாக்க முடியாது என்று கலந்துரையாடலில் தனது ஆதங்கங்களைத் தெரிவித்தார் பேராசிரியர் புஸ்பரட்ணம்.பழைய பூங்காவு அழிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய புராதன சின்னங்களைப் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறைப்பட்டார்.குறிப்பாக 200 வருடங்களுக்கு மேற்பட்ட சிவன் கோயில் சாவகச்சேரியில் மீட்கப்பட்டபோது இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றார் பேராசிரியர். எனவே மக்களிடம் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். பழமையப் பேணிக்காப்பதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதன் மூலமாக நாம் பண்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்றார் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.

Powered By: TNPF

பார்வை